ETV Bharat / city

நடிகையை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த ஆசாமிகள் - அதிரடியாக கைதுசெய்த காவல் துறை!

author img

By

Published : Mar 10, 2022, 8:28 PM IST

துணை நடிகை வீட்டிற்குள் புகுந்து கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த இரு நபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
நடிகையை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த ஆசாமிகள்
நடிகையை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த ஆசாமிகள்

சென்னை: வளசரவாக்கம் பகுதியில் 35 வயதான சினிமா துணை நடிகை ஒருவர், கடந்த 3 ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன் தினம்(மார்ச்.08) துணை நடிகை வீட்டிலிருந்தபொழுது யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டுள்ளது.

இதனையடுத்து நடிகை கதவைத் திறந்து பார்த்தபோது வாசலில் அடையாளம் தெரியாத இருவர் நின்று கொண்டிருந்தனர். கதவைத்திறந்த நொடியில், சட்டென வீட்டிற்குள் புகுந்த அந்த நபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மிரட்டி, நடிகை அணிந்திருந்த 6 கிராம் செயின், போட்டிருந்த கம்மலை பறித்துக் கொண்டனர்.

நடிகையை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த ஆசாமிகள்
நடிகையை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த ஆசாமி

பின்னர் அந்தக் கும்பல் வீட்டிலிருந்த 50ஆயிரம் பணத்தைத் திருடிக்கொண்டு, கத்தி முனையில் நடிகையை பாலியல் பலாத்காரம் செய்து, அதை செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதனால் பதற்றமடைந்த நடிகை உடனே காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் இரவு பணியிலிருந்த விருகம்பாக்கம் ஆய்வாளர் தாம்சன் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று நடிகையிடம் விசாரணை நடத்தினார். பின்னர் நடிகை இது குறித்து வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அளித்தப்புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

அதன்பின் சம்பவயிடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அதே பகுதியைச் சேர்ந்த கண்ணதாசன் மற்றும் அவருடைய நண்பர், துணை நடிகை வீட்டிற்குள் வந்தது பதிவாகி இருந்தது. இதனையடுத்து குன்றத்தூரில் பதுங்கி இருந்த கண்ணதாசனை காவல் துறையினர் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்னொரு நபரான செல்வகுமாரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

நடிகையை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த ஆசாமிகள்
நடிகையை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த ஆசாமி

மேலும் கைது செய்யப்பட்ட அவர்களிடம் நடத்திய விசாரணையில், கண்ணதாசன் துணை நடிகையின் வீட்டை நோட்டமிட்டு திருடினால், அதிகப் பணம் கிடைக்கும் என செல்வகுமாரிடம் பேசியது தெரியவந்தது.

இதனையடுத்து செல்வகுமார் மற்றும் கண்ணதாசன் ஆகியோர் துணை நடிகையின் வீட்டில் யாருமில்லாதபோது, வீட்டிற்குள் புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டிப் பணம் மற்றும் நகையைத் திருடியுள்ளனர். பின் செல்வகுமார் துணை நடிகையைப் பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோவாக எடுத்து, காவல் துறையினரிடம் சென்றால் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவதாகக் கூறி மிரட்டி சென்றதும் காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்த இரு செல்போன்களை காவல் துறையினர் பறிமுதல் செய்து, அதில் வீடியோ உள்ளதா எனத் தேடியபோது, துணை நடிகையின் வீடியோ செல்போனில் இல்லை.

எனவே வீடியோ அழிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் சைபர் ஆய்வகத்திற்கு செல்போன்களை அனுப்பி உள்ளனர். மேலும் துணை நடிகையிடம் பறிக்கப்பட்ட நகை மற்றும் பணம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: 'விரைவில் திராவிட குடும்ப அரசியலுக்கு முடிவு கட்டப்படும்' - அண்ணாமலை விமர்சனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.